உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

16 September 2012

இனி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான்


புதுடில்லி: மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வரும் என, தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை அடுத்து, பெட்ரோலிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, மானிய விலையில் விற்பதால், நடப்பு நிதியாண்டில் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன், டீசல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படா விட்டாலும், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் கொடுக்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது, சிலிண்டர் ஒன்றுக்கு, 347 ரூபாய் வரை, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், இதைத் தவிர்க்கும் வகையில், இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த கட்டுப்பாடு, எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது பற்றிய, அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்துக்கான கட்டுப்பாடு, உடனடியாக அமலுக்கு வரும். மானிய விலையில் அல்லாமல், சந்தை விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை குறித்து, சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, மாதம் தோறும் அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றன.
நன்றி: தினமலர் 

காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!

காமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிதாஸ் என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற படத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன் லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி முதல் ரஜினி, கமல் வரை முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.

இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள லூஸ் மோகன் கடைசியாக தங்கர்பச்சானின் அழகி படத்தில் நடித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் லூஸ் மோகனுக்கு  இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், "சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.

மறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவருக்கு இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். மாலை அவரது இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.

நன்றி: தினமலர் 

01 September 2012

வரதட்சணை கேட்டால் ஏழு ஆண்டு சிறை தண்டனை

புதுடில்லி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை ஒழிப்பு சட்டத்தில், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பிற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். ஆனால், வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோரே அதிகம் பாதிக்கப்படுவோராக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். இச்சட்டத்தின் கீழ், குற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம்.பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் என, வகைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார் சசிகுமார்!

"சுப்ரமணியபுரம் துவங்கி, தற்போது நடித்துள்ள, "சுந்தரபாண்டியன் வரை, தான் நடித்த அனைத்து படங்களிலும், தாடி கெட்டப்பிலேயே நடித்துள்ளார் சசிகுமார். ஆனால், அடுத்த ஆண்டு தான் இயக்கி, நடிக்கவுள்ள ஒரு படத்திற்காக, முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார்.  மேலும், தொடர்ந்து புதுமுக டைரக்டர்களின் படங்களிலேயே நடிக்க திட்டமிட்டிருப்பவர்,  தன் மூலமாக, குறைந்தது ஒரு பத்து இயக்குனர்களையாவது அறிமுகம் செய்ய, யோசித்து வருவதாக சொல்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT