உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

05 January 2013

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம்


புதுடில்லி: "பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும்படி உத்தரவிட முடியாது. இதற்கான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் டிவிஷன், "பெஞ்ச்' தெரிவித்துள்ளது.

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரமிளா சங்கர் என்பவரும், சமூக ஆர்வலர் ஒமிதா துபே என்பவரும், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், அவர்கள் கூறியிருந்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட, எம்.பி.,க் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை, பெண் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கவும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணைகளை, பெண் நீதிபதிகளே நடத்தவும் உத்தரவிட வேண்டும்.பெண்களின் பாதுகாப்பிற்காக, தற்போது உள்ள சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அவற்றை அமல்படுத்தும்படி, ஆணையிட வேண்டும்.பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில், பெண்களின் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். :

இந்த மனுக்கள் நீதிபதிகள் ராதா கிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட், டிவிஷன், "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யும்படி, மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி, உத்தரவிடும் அதிகாரம், சுப்ரீம் கோர்ட்டிற்கு இல்லை. எனவே, மனுவில் விடுக்கப்பட்டுள்ள, அது தொடர்பான வேண்டுகோள் குறித்து விசாரிக்க முடியாது.
அதேநேரத்தில், அரசியல்வாதிகளுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க உத்தரவிட வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து இந்தக் கோர்ட் பரிசீலிக்கும். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.அத்துடன், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தற்போதுள்ள சட்டத்தை கடுமையாக்குவது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள, நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டியின், விசாரணை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும், மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தை போல சட்டம்:

"பாலியல் பலாத்காரங்களை தடுக்க, பார்லிமென்ட் சட்டம் இயற்றும் என்று காத்திராமல், மகாராஷ்டிரா மாநில அரசே, தற்போதுள்ள தன் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை நகரில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று தாக்கல் செய்த, பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி மோகித் ஷா மற்றும் நீதிபதி மோக்தா ஆகியோர் அடங்கிய, மும்பை ஐகோர்ட், "பெஞ்ச்' இந்த உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, சட்டங்களை திருத்துவது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்; இதுதொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். "ஈவ்-டீசிங்'கை தடுக்க, தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது; அதேபோல், இங்கும் இயற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சோனியா 49 முறை இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம்

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்துள்ள விவரம், தெரியவந்துள்ளது.

பிரதமர், துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோர் மட்டுமே, விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணிக்க முடியும். பிரதமருக்கு மட்டும், இதில் விலக்கு உண்டு.இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் வர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில், காங்., தலைவர் சோனியா, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆகியோர், பயணம் செய்ததன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார். 


ராணுவ அமைச்சகம் பதில்: சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துள்ளார். இவற்றில், 28 முறை, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், ஆறு பயணங்கள் அரசுத் துறை தொடர்பானவையும் ஆகும். காங்., பொதுச் செயலர் ராகுல், மூன்று ஆண்டுகளில், எட்டு முறை பயணித்துள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட "நித்தி' முடிவு


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு

தேனி: தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது. பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.
டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

அமெரிக்க பார்லிமென்ட்டில் பகவத் கீதை படித்து எம்.பி.,யாக பதவி ஏற்ற பெண்


வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவில், நவம்பரில் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு,31, பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.

துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:

என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு துளசி கூறினார். ஹவாய் சட்டசபை உறுப்பினராக, 21 வயதில் பதவி ஏற்றவர் துளசி. வளைகுடா போரில் பங்கேற்பதற்காக, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலிபோர்னியாவிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அமி பெராவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை குஜராத்தை சேர்ந்தவர். அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வாகியுள்ள மூன்றாவது இந்தியர் அமி பெரா. 1950ல், தலிப் சிங்கும், 2005ல், குடியரசு கட்சி சார்பில், பாபி ஜின்டாலும், எம்.பி.,யாக பதவி வகித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT