உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

26 June 2012

கோவை சிறையில் கைதிகளிடமிருந்து லேப்டாப், செல்போன்,டிவிடி பிளேயர் மற்றும் கட்டுக்கட்டாக பீடி

கோவை சிறையில் குண்டு வெடிப்பு கைதிகளிடமிருந்து லேப்டாப்,  செல்போன்,டிவிடி பிளேயர் மற்றும் கட்டுக்கட்டாக பீடி உள்ளிட்டவை  கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள்  அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை  பெற்றவர்கள், குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்,தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  சிக்கியவர்கள்,ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கடுமையான சோதனைக்கு  பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும்  உள்ளே கொண்டு செல்ல முடியாத அளவுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கைதிகளிடம் இருந்து அவ்வப்போது செல்போன்கள் பறிமுதல்  செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வந்தன.இதைத் தொடர்ந்து கைதிகள் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் தூக்கு மேடை அருகே வெளியில்  இருந்து சிறைக்குள் ஒரு மர்ம பார்சல் விழுந்தது.அதனை 10-ம் நம்பர் பிளாக்கில்  அடைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பு கைதிகளான ஹக்கீம், அன்வர், இப்ராகிம்  ஆகியோர் ஓடி வந்து எடுத்துக் கொண்டு தங்களது பிளாக்குக்கு சென்றனர்.

இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து விட்டனர்.இதைத்  தொடர்ந்து அவர்கள் சிறை சூப்பிரண்டு முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ்  சூப்பிரண்டு அந்த மர்ம பார்சல் பற்றி விசாரிக்க ஒரு போலீஸ் படையை அனுப்பினர்.

அவர்கள் குண்டு வெடிப்பு கைதிகள் இருந்த அறைக்கு சென்றனர்.அவர்களை பார்த்தும்  குண்டு வெடிப்பு கைதிகள் ஆத்திரம் அடைந்தனர்.உள்ளே வந்தால் கொன்று விடுவோம்  என்று கூறி மிரட்டினார்கள்.இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் குண்டு வெடிப்பு கைதிகளிடம்  இருந்த பார்சலை பறித்தனர்.அந்த மர்ம பார்சல் சாக்கு மூட்டைக்குள் பொருட்களை  போட்டு தைக்கப்பட்டிருந்தது.அதனை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார்  பிரித்து பார்த்தனர்.

அதில் ஒரு மினி லேப்-டாப், 26 செல்போன்கள், 351 சி.டி.க்கள், 5 சார்ஜர்கள்,  24 ஹெட்போன்கள்,டேட்டா கேபிள்,மினி டி.வி.டி. பிளேயர்,டார்ச் லைட், மெமரி  கார்டு, பீடி கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதனையடுத்து சிறைக்குள் பார்சல் கடத்திய குண்டு  வெடிப்பு கைதிகள் ஹக்கீம்,அன்வர்,இப்ராகிம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்,தடை செய்யப்பட்ட பொருட்களை  சிறைக்குள் கடத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.

சதிச் செயலுக்கு திட்டமா?

கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போன், சி.டி.க்கள்  மூலம் அவர்கள் ஏதாவது சதி செயலுக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம்  போலீசாருக்கு எழுந்தது. இதைத்தொடர்ந்து அது தொடர்பான விசாரணையில் அவர்கள்  இறங்கினர்.

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை ஆபரேட் செய்து பார்க்கப்படுகிறது.சி.டி.க்களும்  போட்டு பார்க்கப்படுகிறது.அதில் ஏதாவது சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் பதிவு  செய்யப்பட்டு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

குண்டு வெடிப்பு கைதிகளுக்கு வெளியில் இருந்து பார்சலை தூக்கி வீசியது யார்? என்பது  குறித்த விசாரணையும் நடக்கிறது. மேலும் இந்த நேரத்தில்தான் பார்சல் தூக்கி வீசப்படும்  என்ற தகவல் குண்டு வெடிப்பு கைதிகளுக்கு எப்படி தெரியவந்தது? எப்படி அந்த தகவலை  வெளியில் இருந்தவர்கள் தகவல் சொன்னார்கள்? என்பது தெரியவில்லை.

இதுதவிர சிறைக்குள் தூக்குமேடை அருகே அதிக பாதுகாப்பு இருக்காது.அதை  பயன்படுத்திதான் அந்த இடத்தில் பார்சல் தூக்கி வீசப்பட்டுள்ளது.எனவே இந்த  திட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT