உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

25 July 2012

தமிழை கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் தரப்படும் பராமரிப்பு வரி ரசீது, பெரும் அச்சுப் பிழையுடன் காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, தனியார் சுங்கச் சாவடிகள், பராமரிப்பு வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. 

ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில், இதற்கான ரசீது அச்சடிக்கப் பட்டு இருக்கும்.ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில், எந்த பிழையும் இன்றி அச்சடிக்கப் பட்டு உள்ள அந்த ரசீதில், தமிழில் உள்ள வார்த்தைகள் மட்டும், பொருள் புரியாத வகையில், பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.சென்னை தாம்பரம் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் வழங்கப்படும் ரசீது, பெரும் பிழையுடன் காணப்படுவதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது என்ன "ஸ்தலம்?'
"இடம்' என்ற நடைமுறை சொல் பழக்கத்தில் இருக்கும் போது, அதற்கு பதிலாக அந்த ரசீதில், "ஸ்தலம்' என்ற வார்த்தையை அச்சடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும், "ஸ்தளம' என, பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.கிலோ மீட்டரை சுருக்கமாக, கி.மீ., எனப் பயன்படுத்துவது வழக்கம். அதையும், "கி மி' என, பிழையுடன் அச்சடித்துள்ளனர். வாகனம் எந்த இடத்திலிருந்து, எந்த இடம் செல்கிறது என அறியும் இடத்தில், "அதுர டொல ப்லாஜா' என்ற புரியாத மொழி வார்த்தைகள் உள்ளன."பிரிவு' என்ற இடத்தில், "தாம்பரம் முதல் திண்டிவனம்' என, எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த பொருளும் இல்லாத வண்ணம், "தம்பரம, திடிவநம' என, அச்சடிக்கப்பட்டு உள்ளது. "வாகனத்தின் வகை' என்ற இடத்தில், "காரு, வ்யாந்த், ஜூப்' என உள்ளது.இப்படி, தப்பும் தவறுமாக உள்ள ரசீதில், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது என்ற வார்த்தையும்; கட்டணம் பற்றிய இதர தகவல்களும், பிழை இல்லாமல் அச்சடிக்கப் பட்டு உள்ளன.முன்பு, தேசிய சேமிப்பு குறித்த மத்திய அரசு விளம்பரங்கள், நாக்பூரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அங்கு பணிபுரியும் யாராவது ஒரு தமிழர், தனக்குத் தெரிந்த தமிழில், அந்த மொழிபெயர்ப்பைச் செய்வது உண்டு.

அக்கறையின்மை
ஆனால், இப்போது கணினி காலம். தமிழ் மொழியில் கட்டண ரசீதைத் தெளிவாக அச்சடிக்க முடியாதா அல்லது அக்கறையின்மையா? கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை, நெடுஞ்சாலைத் துறை இதில் ஏன் காட்டவில்லை. கட்டணம் செலுத்துவோர், விதிக்கப்பட்ட தொகையை மட்டும் கவனிப்பர்; மற்றவற்றை பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றனரா?சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட, பெரும் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் கண்களில் இது படவில்லையா அல்லது தங்கள் கார் டிரைவர்களே பணத்தைக் கட்டி ரசீது வாங்குவதால், இந்த விஷயம் அவர்கள் கண்களில் படவில்லையா?

வாகன ஓட்டிகள் புகார்
இங்கு மட்டும் அல்ல, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் ரசீது, பிழையுடனே காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இவ்வாறு எழுத்துப் பிழையுடன் ரசீது வழங்கும் சுங்கச் சாவடிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மற்ற சுங்கச் சாவடிகள், பிழையின்றி ரசீது வழங்கும்.

நன்றி: தினமலர் 

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT