உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

23 July 2012

ஒரே ஒரு ஆசிரியர் பணி புரியும் உயர்நிலைப் பள்ளி


செய்யூர்:காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு அருகில் உள்ள கடுக்கலூர் உயர்நிலைப் பள்ளியில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். அவர் விடுப்பு எடுக்கும் நாட்களில், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.

கடுக்கலூரில், கடந்த 1939ம் ஆண்டு, ஆரம்பப் பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளி, 1982ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், மேல் வகுப்புகளுக்கு 10 கி.மீ., தொலைவில் உள்ள, கடப்பாக்கம், சூணாம்பேடு, ஆகிய இடங்களில் உள்ள உயர் நிலை பள்ளிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கடுக்கலூர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், அரசு உத்தரவிட்டது. தற்போது பள்ளியில், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, 66 மாணவிகள் உட்பட 127 பேர் படிக்கின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளி தரம் உயர்த்தப்பட்டபோது, பொறுப்பு தலைமை ஆசிரியரும், ஒரு பட்டதாரி ஆசிரியரும் இருந்தனர். தலைமை ஆசிரியர் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இதனால், ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார்.உயர்நிலைப் பள்ளிக்கு, ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆய்வக உதவியாளர், எழுத்தர், எட்டு பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இந்த உயர் நிலை பள்ளியில், பல மாதங்களாக பணி புரிந்து வருகிறார். அவர் விடுப்பு எடுத்தால், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வின் காரணமாக, வேறு பள்ளிகளுக்கு மாற்ற பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, மாறுதல் சான்றிதழ் தரும்படி, பணியிலிருக்கும் ஆசிரியரை கேட்டு வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையால், அறிவியல் ஆய்வகப் பொருட்கள் துருப்பிடிக்கும் நிலையில் உள்ளன.

பாதிப்பு :இது குறித்து கிராம கல்விக்குழுத் தலைவர் தனலட்சுமி கூறும்போது, ""மிகவும் சிரமப்பட்டு பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினோம். ஆனால், இதுவரை போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,'' என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கூறும்போது, ""விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அப்போது இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மாணவர்களின் நலன் கருதி மாற்றுப் பணியில், ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர்கள் நியமனம் நடைபெற உள்ளது.அப்போது தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பள்ளி கூடுதல் கட்டடத்திற்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், 48 லட்ச ரூபாய் மதிப்பில், ஏழு வகுப்பறைகள், ஆய்வகம், கழிவறை, குடி நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.

சத்துணவு பற்றாக்குறை:பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு வழங்கப்படுகிறது. ஒன்பது மற்றும் 10ம் வகுப்பில் படிக்கும், 44 மாணவர்களுக்கு, மதிய உணவு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வர வேண்டியுள்ளது. இது குறித்து சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறும்போது, ""மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர் 

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT