புதுக்கோட்டை இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும், ஐந்து ஓட்டுக்கு கிடைத்த 5,000 ரூபாயை, இளம்பெண் மீண்டும் கட்சியினரிடம் சேர்த்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. இதில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர் தரப்பில், ஓட்டுக்கு 1,000 ரூபாய் பணம், தொகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு, கடந்த 8ம் தேதி வழங்கப்பட்டது.இதில் நகரப் பகுதியில் பணம் சரியாக வாக்காளர்களுக்கு பட்டுவாடா ஆகவில்லை என, வாக்காளர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்து, நேற்று முன்தினம் மருப்பிணி ரோடு பகுதியில், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தன்னுடைய குடும்பத்தினரின் ஓட்டுக்கு கொடுத்த, 5,000 ரூபாய் பணத்தையே, இளம்பெண் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ளார்.புதுக்கோட்டை, மச்சுவாடி பகுதியில் உள்ள ராம்நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி, 26. எம்.பி.ஏ., பட்டதாரியான இவருடைய வீட்டில், ஐந்து ஓட்டுகள் உள்ளன.கடந்த, 8ம் தேதி மாலை துர்காதேவி வீட்டில், அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய கட்சிப் பிரமுகர்கள், ஓட்டுக்கு, 1,000 ரூபாயை, வீட்டில் இருந்தவர்களிடம் வற்புறுத்தி கொடுத்து விட்டு சென்றுவிட்டனர்.
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த துர்காதேவி, ஓட்டுக்கு பணம் கொடுத்ததைக் கேள்விப்பட்டு, அந்த பணத்தை அப்படியே கவருடன் கொண்டு சென்று, மச்சுவாடியில் உள்ள முக்கிய கட்சியின் அலுவலகத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டார்.
இதைக்கண்ட அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா? என்று, பெருமையாக பேசியுள்ளனர். -KRK NETWORK-
இதைக்கண்ட அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா? என்று, பெருமையாக பேசியுள்ளனர். -KRK NETWORK-






