கூடலூர்: சாலையோரக் கடையில் இட்லி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், வீடு, பைக், கார் உள்ளிட்டவை, அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், 50. இவருடன், ரகமத்துல்லா மற்றும் வின்சென்ட் ஆகியோர், இட்லி வாங்குவதற்காக, செம்பாலாவில் உள்ள சாலையோரக் கடைக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். இதில், ரகமத்துல்லா மட்டும் கடைக்குச் சென்று, அவசரமாக இட்லி கேட்டார். ஏற்கனவே இட்லி சாப்பிட வந்திருந்த சலிவயல் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, 48, மற்றும் சிலர், "எங்களுக்குத் தான் முதலில் இட்லி கொடுக்க வேண்டும்' என, கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த அங்கு வந்த அப்துல்ரகுமான், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோரை, எதிர்தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது; அப்துல் ரகுமானின் கார் கண்ணாடி சேதமடைந்தது. அங்கிருந்து தப்பிய ரகமத்துல்லா, சம்பவம் குறித்து நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக, ஆட்டோ மற்றும் காரில் வந்த கும்பல், கருணாநிதி இல்லாததால், சலிவயலில் உள்ள அவரது வீட்டின் கூரை, ஜன்னல் மற்றும் பைக்கை சேதப்படுத்தியது. மோதலில் காயமடைந்த அப்துல் ரகுமான், வினோத் ஆகியோர், கேரளா மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து கூடலூர் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி (பொ), எஸ்.ஐ., சோபியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, கருணாநிதி உள்ளிட்ட ஐந்து பேரையும், கருணாநிதியின் வீட்டை தாக்கியது தொடர்பாக, கூடலூரை சேர்ந்த ரகமத்துல்லா உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்து ஆட்டோ, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச் சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-KRK NETWORK-
-KRK NETWORK-





