கோபிசெட்டிபாளையம்: காதலி பேச மறுத்ததால், சந்தேகம் அடைந்த காதலன், காதலியின் தாடையை உடைத்தார். கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காதலி, காதலனை கட்டி அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டடிபாளையம், பண்டிதர் வீதியைச் சேர்ந்தவர் பிரபு,24; சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் வினோதினி, பிளஸ் 2 படித்துள்ளார். பிரபுவும், வினோதினியும், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மொபைல்போனில் இருவரும், தினசரி மணிக்கணக்கில் பேசி வந்தனர். வினோதினிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டது. போனில் பிரபு தொடர்பு கொண்டால், வினோதினி "கட்' செய்தார். பல நாட்களாக, பிரபுவுடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரம் அடைந்த பிரபு, நேற்று முன்தினம் வினோதினி வீட்டுக்குச் சென்றார். "போன் செய்தால் ஏன் "கட்' செய்கிறாய்?' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்ட பிரபு, திடீரென வினோதினியை தாக்கியதில், அவரது தாடை உடைந்து, ரத்தம் வடிந்தது. கோபி அரசு மருத்துவமனையில் வினோதினி சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று காலை, ""பிரபுவை மட்டுமே காதலிக்கிறேன்; அவரைப் பார்க்க வேண்டும்,'' எனக் கூச்சலிட்டவாறு, அரசு மருத்துவமனையில் தரையில் புரண்டு அழுதார் வினோதினி. சிகிச்சைக்கு வந்தவர்கள் அங்கு திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த கோபி போலீசார், பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். பிரபு, தன் பெற்றோருடன் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிரபுவை பார்த்த வினோதினி ஓடிச் சென்று, கட்டி அணைத்துக் கொண்டார். இருவரும் மெய் மறந்ததை பார்த்த போலீசாரும், மருத்துவமனைக்கு வந்தவர்களும், சிரிப்பை வெளிக்காட்ட முடியாமல், முகத்தைத் திருப்பிக் கொண்டனர். இருவரையும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், இருவரும் மேஜராகி விட்டனரா என விசாரித்து, அறிவுரை கூறி, இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-KRK NETWORK-
-KRK NETWORK-






