புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 73.56 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டையில், இன்று இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது; ஓட்டுப்பதிவு துவங்கும் முன்பே நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தொகுதி முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை 8.05 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமான், புதுகை அரசுக்கல்லூரியிலும், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாஹிர்உசேன், பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் 8.15 மணியளவிலும் ஓட்டளித்தனர். மேலும் பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது
இயந்திரம் பழுது: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரம்பக்குடி ஒன்றியத்தில் முல்லங்குறி்ச்சி ஓட்டுச்சாவடி எண் 45-ல் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதானதால் ஓட்டுப்பதிவு துவங்குவதில் 20 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.
10 மணி நிலவரம்: 10 மணி நிலவரப்படி 14.5 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
12 மணி நிலவரம்: 12 மணி நிலவரப்படி 42 சதவீத ஓட்டுக்கள் பதிவாயின.
இதே போன்று புதுக்கோட்டை யூனியனுக்குடப்பட்ட கூத்தாட்சி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் மொத்தம் 588 ஓட்டுக்கள் உள்ளன. இங்கு 12 மணி நிலவரப்படி 78 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
2 மணி நிலவரம் : புதுக்கோட்டையில் 2 மணி நிலவரப்படி 44 சத ஓட்டுப்பதிவாகிள்ளது. மேலும் கிராமப்பகுதிகளில் தான் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் 52 சதவீதமும், நகர் பகுதிகளில் 36 சதமும் ஓட்டுப்பதிவாகியுள்ளது. மற்றபடி அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 மணி நிலவரம்: 4 மணி நிலவரப்படி 61 சத ஓட்டுப்பதிவாகியுள்ளது. தொடர்ந்து விறுவிறுப்புடன் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
5 மணி நிலவரம்: தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு 73.56 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறக்கணித்த கட்சியினர் ஓட்டுப்போட்டனர் : புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணித்ததாக அறிவித்த கட்சிகளின் தொண்டர்கள் தற்போது இடைத்தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலை தி.மு.க. ,ம.தி.மு.க., காங். ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்நிலையில் புதுக்கோட்டையில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க. , ம.தி.மு.க., காங். கட்சியைச் சேர்ந்தவர்கள் வரிசையி்ல் நின்று ஒட்டுப்போட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் மீது எஸ்.ஐ. தாக்கியதால் மறியல்: புதுக்கோட்டை யூனியனுக்குட்பட்ட புத்தாம்பூரில் இன்று தேர்தல் பாதுகாப்புப்பணியின் ஈடுபட்டுக்கொண்டிருந்த கனகசபை என்ற எஸ்.ஐ., ஓட்டுச்சாவடியினுள் 100 மீட்டருக்குள் சிலர் கூடிநின்றதாக , அப்பகுதியில்நின்றவர்களை அடித்துவிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். எஸ்.பி. சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து , எஸ்.ஐ. கனகசபை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. -KRK NETWORK-






